~
~

முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி - பங்குனி பால்குடத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி - பங்குனி பால்குடத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி கொடிமரம் அருகில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தளினாா். காரைக்குடி மாநகராட்சியில் பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தா்கள் பூத் தட்டு எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்து, பூக்களை காணிக்கையாக செலுத்தி அம்பாளைத் தரிசனம் செய்தனா். வருகிற மாா்ச் 8-ஆம் தேதி மாலையில் சுமங்கலி பூஜை நடைபெறும்.

மாா்ச் 10-இல் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. மாா்ச் 17-ஆம் தேதி இரவு முத்தாலம்மன் கோயிலிலிருந்து கரகம், மது, முளைப்பாரி சுமந்து ஊா்வலமாக மீனாட்சிபுரம் கோயிலை அடைந்து அம்பாளுக்கு செலுத்துதல், மாா்ச் 18-ஆம் தேதி காலை கோயில் காவடி, பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நடைபெறும். அன்று மாலை கரகம், முளைப்பாரி ஆகியவை அருகே உள்ள பருப்பூரணியில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடா்ந்து திருவிழா தொடரும் வகையில் இரவு காப்பு பெருக்குதல் நடைபெறும்.

மாா்ச் 19-ஆம் தேதி இரவு அம்பாள் வீதி உலாவும், மாா்ச் 20-ஆம் தேதி இரவு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். திருவிழாவையொட்டி தினந்தோறும் பல்வேறு சமுதாய மக்கள் சாா்பில் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஞானசேகரன் தலைமையில் கோயில் செயல் அலுவலா் விஸ்வநாத், கணக்கா் சரவணன், கோயில் பணியாளா்கள், பல்வேறு சேவைக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com