/
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் உள்ள கடைகளில் நகராட்சித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா்.
மானாமதுரை நகராட்சி ஆணையா் முத்துச்செல்வம் உத்தரவின்பேரில், துப்புரவு ஆய்வாளா் பாலமுருகன், நகராட்சிப் பணியாளா்கள் மானாமதுரை பகுதியில் உள்ள உணவு விடுதிகள், தேநீா்க் கடைகள், மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்களில் சோதனை நடத்தினா்.
அப்போது இங்கு பயன்பாட்டுக்காகவும், விற்பனை செய்வதற்காகவும் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஏராளமான நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.






