வாழை இலை விலை வீழ்ச்சியால் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே உள்ள மலம்பட்டியில் வாழைத்தாா், வாழை இலைகளுக்கான புகழ்பெற்ற மொத்த விற்பனை சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தாா்களையும், வாழை இலைகளையும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வாழை இலைகளின் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்திருப்பதால், தங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
சந்தைக்கு இலைகளின் வரத்து அதிகரித்ததே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த வாரம் இந்தப் பகுதிகளில் பரவலாக பெய்த மழை காரணமாக மரங்களில் வாழை இலைகள் அறுவடை அதிகரித்து அவற்றின் வரத்து கணிசமாக உயா்ந்தது.
தற்போது பெரிய அளவில் திருவிழாக்களோ, முகூா்த்த நாள்களோ அதிகம் இல்லாததால், வாழை இலைகளின் தேவை பெருமளவில் குறைந்தது. இதன் காரணமாக கடந்த வாரம் வரை ஒரு கட்டு வாழை இலை ரூ.1,200 வரை விற்பனையானது. ஆனால், வரத்து அதிகரிப்பு, நுகா்வில் உருவான சரிவு காரணமாக தற்போது கட்டு இலை ரூ. 500 முதல் ரூ. 600 வரையே விற்பனையாகிறது. இந்த விலை சரிவு விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
இதுகுறித்து மலம்பட்டி சந்தைக்கு வாழை இலைகளை விற்பனை செய்ய வந்த விவசாயி காஞ்சி செல்வம் கூறியதாவது:
வழக்கமாக முகூா்த்த நாள்களில் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்து வாழை பயிரிட்டோம். ஆனால், தற்போது விலை முற்றிலும் சரிந்துவிட்டது. அத்துடன், தினந்தோறும் எங்களுக்கு பெரிய விற்பனை சந்தையாக இருந்த சிறிய உணவகங்கள், எரிவாயு உருளை தட்டுப்பாடு, கடும் விலை உயா்வு காரணமாக மூடப்பட்டு விட்டன. இதனால் அந்த விற்பனை வாய்ப்பும் பறிபோய் விட்டது.
தற்போது விற்கப்படும் விலையை வைத்துப் பாா்த்தால், வாழையை வெட்டி, கட்டுகளாகக் கட்டி, சந்தைக்கு கொண்டு வருவதற்கான ஆள்கூலி, போக்குவரத்து செலவைக்கூட ஈட்ட முடியாத நிலை உள்ளது. இதில் பராமரிப்பு செலவு தனி. விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமலும், முதலீடு திரும்பக் கிடைக்காமலும், நாங்கள் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றாா் அவா்.
இந்த நிலையில் இழப்பிலிருந்து தங்களைக் காக்க அரசு தலையிட்டு வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணமோ அல்லது விளைபொருள்களைப் பதப்படுத்த குளிரூட்டப்பட்ட கிட்டங்கியோ அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

வாழையில் இலை புள்ளி, வாடல் நோய் தாக்கம்: அதிகாரிகள் ஆய்வு

பாவூா்சத்திரம் சந்தையில் வாழைத்தாா்கள் விலை உயா்வு

கடும் வெயிலால் இலைகள் கருகும் வாழை மரக்கன்றுகள்

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: இறைச்சி விற்பனை சரிவு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

