தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

உத்தமபாளையம் பகுதியில் நெற்பயிருக்கு மாற்றாக அதிகரித்து வரும் வாழை விவசாயம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் நெற்பயிருக்கு மாற்றாக திசு வாழை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருவதால், நெற்பயிர் விவசாயத்தின் பரப்பளவு படிப்படியாக குறையும்

News image
Updated On :20 மார்ச் 2017, 10:36 am

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் நெற்பயிருக்கு மாற்றாக திசு வாழை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருவதால், நெற்பயிர் விவசாயத்தின் பரப்பளவு படிப்படியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பாசன நீரைப் பயன்படுத்தி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் முதல் வீரபாண்டி வரையில் 14,707 ஏக்கர் பரப்பளவுக்கு இருபோக நெற்பயிர் விவசாயம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பற்றாக்குறையால் பாசன நீர் முறையாக கிடைக்காத நிலையில், நெற்பயிர் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்தாண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக குறைந்த நிலையில், நெற்பயிர் விவசாயம் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, வேளாண் அதிகாரிகள் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளிலுள்ள விவசாயிகளை மாற்று விவசாயம் செய்ய பரிந்துரை செய்தனர்.
திசு வாழைக்கு முக்கியத்துவம்: தற்போது உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேலாக திசு வாழை விவசாயம் நடைபெறுகிறது. ஆழ்துளைக் கிணறு மூலமாக சொட்டு நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தி வாழை விவசாயத்தை ஆர்வத்துடன் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். பருவமழை பற்றாக்குறை நீடிக்கும் நிலையில், கம்பம் பள்ளத்தாக்கில் பாரம்பரியமான நெற்பயிர் விவசாயத்தின் பரப்பளவு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நெற்பயிருக்கு தண்ணீர் அதிகம் தேவை. கடந்த முறை அறுவடை நேரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது, அதேபோல, இம்முறை முதல் போக நெல் சாகுபடி பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால், தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது மாற்றுப் பயிராக திசு வாழையை தேர்வு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து தண்ணீர் பிரச்னை நீங்கும் பட்சத்தில், பாரம்பரியமான நெற்பயிர் விவசாயத்தையே தொடருவோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.