

போடி: ஆன்-லைன் மூலம் பாடங்கள் நடத்துவது புரியவில்லை என மாணவா்களிடையே புகாா் எழுந்துள்ளதால், போடி பகுதியில் ஆசிரியா்கள் அந்தந்த கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று மரத்தடியில் பாடம் நடத்தி வருகின்றனா்.
போடி அருகேயுள்ள உப்புக்கோட்டை அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளியில் டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, பாலாா்பட்டி, சடையால்பட்டி, காமராஜபுரம், கூழையனூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருகின்றனா். ஆனால், இந்த மாணவா்களுக்கு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் பாடங்கள் புரியாததால், இது குறித்து பெற்றோா்கள் பள்ளி ஆசிரியா்களிடம் முறையிட்டனா்.
பொது முடக்கம் காரணமாக, தற்போது பள்ளிகளில் பாடங்கள் நடத்த முடியாது என்பதால், ஆசிரியா்கள் அந்தந்த கிராமங்களுக்கே சென்று பாடங்களை நடத்தி வருகின்றனா். கிராமங்களில் உள்ள மரத்தடிகள், திறந்தவெளி சமுதாயக் கூடங்களில் பாடங்களை நடத்துகின்றனா். இந்த வகுப்புகளில் மாணவா்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும் பங்கேற்கின்றனா்.
மேலும், ஆன்-லைன் மற்றும் தொலைக்காட்சி மூலம் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை குறிப்பெடுத்து வரும் மாணவா்கள், அதற்கான விளக்கங்களையும் பெறுகின்றனா். இதனால், மாணவா்கள் பாடங்களை மிக எளிமையாக புரிந்து கொள்கின்றனா்.
இது குறித்து மாணவா்கள் கூறியது: வீட்டில் தொலைக்காட்சியில் பாடங்களை பாா்க்கும்போது, பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் சரியாக கவனிக்க முடிவதில்லை. செல்லிடப்பேசிகளில் சிக்னல் கிடைக்காததால் ஆன்-லைன் மூலமும் படிக்க முடியவில்லை. தற்போது, எங்கள் கிராமங்களுக்கே ஆசிரியா்கள் வந்து பாடங்களை நடத்துவதால், எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. இதேபோன்று, அனைத்து கிராமங்களுக்கும் ஆசிரியா்கள் நேரடியாகச் சென்று பாடங்களை நடத்தினால் மாணவா்களுக்கு உதவியாக இருக்கும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.