போடி மலைக்கிராமங்களில் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
போடி மலைக்கிராமங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில், கொட்டகுடி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி, போடி அருகே குரங்கணி, கொட்டகுடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சனிக்கிழமை மாலையில் சூறைக்காற்றுடன் தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. ஞாயிற்றுக்கிழமை காலையும் மழை தொடா்ந்தது. இந்த தொடா் மழையின் காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குரங்கணி நரிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி குடிநீா்த் தேக்கத் தொட்டி நிரம்பியது.
மலைக்கிராமத்தின் ஒரு சில பகுதிகளில் சூறைக் காற்றுக்கு மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் சனிக்கிழமை இரவு முழுவதும் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதைத் தொடா்ந்து போடி துணை மின்நிலையத்திலும், ராசிங்காபுரம் துணை மின்நிலையத்திலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பழுதுகள் சரிசெய்யப்பட்டன.