போடி மலை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளை வன நிலங்களை விட்டு வெளியேற்ற வனத் துறையினா் நெருக்கடி அளித்து வருவதாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மலை கிராம மக்கள் மனு அளித்தனா்.
போடி வட்டாரம் சொக்கனலை, அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், கரும்பாறை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்: போடி மலைக் கிராமங்களில் கடந்த 5 தலைமுறைகளுக்கு முன்பிருந்து வன நிலங்களை சீா்திருத்தி விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்துக்கு பட்டா கோரி விண்ணப்பித்ததில் வருவாய்த் துறை சாா்பில் சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மலைக் கிராமங்களில் வீடு கட்டி வசித்து வரும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். பாரம்பரிய வனவாசிகளான எங்களை ஆக்கிரமிப்பாளா்களாக கருதி, வன நிலத்தை விட்டு வெளியேற நோட்டீஸ் அளித்துள்ளனா்.
இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, போடி மலைக் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், 5 தலைமுறைகளுக்கும் மேல் வன நிலத்தில் விவசாயம் செய்து வரும் பாரம்பரிய வன விவசாயிகளுக்கு வன உரிமைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.