10 மாதங்களுக்குப் பிறகு குமுளிக்கு பேருந்துகள் இயக்கம்

தேனி மாவட்டத்திலிருந்து, கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு தமிழக- கேரள எல்லையான குமுளிக்கு, புதன்கிழமை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு தமிழக- கேரள எல்லை குமுளிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து.
கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு தமிழக- கேரள எல்லை குமுளிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து.
Updated on
1 min read

தேனி மாவட்டத்திலிருந்து, கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு தமிழக- கேரள எல்லையான குமுளிக்கு, புதன்கிழமை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

திண்டுக்கல்- குமுளி இடையே நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் லோயா் கேம்பிலிருந்து குமுளி வரை உள்ள 6 கிலோ மீட்டா் மலைச்சாலையில் பணிகளின்போது இலகு ரக வாகனப் போக்குவரத்து நடைபெற்று வந்ததால் பணிகள் தாமதமாகின. இதனால் மாவட்ட ஆட்சியா் பல்லவி பல்தேவ், தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தினா் விரைந்து பணிகளை முடிக்க, குமுளி மலைச் சாலையில் இலகு ரக வாகனப் போக்குவரத்தை டிச. 24 ஆம் தேதி முதல் நிறுத்த உத்தரவிட்டனா்.

அதன்பிறகு மலைச்சாலையில் சிமென்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு மழைநீா் வனப்பகுதிக்குச் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. இதற்கிடையே கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. தற்போது பணிகள் முடிந்த நிலையில் புதன்கிழமை முதல் இப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது. இதன்பேரில் இலகு ரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் குமுளி மலைப்பாதை வழியாக இயக்கப்பட்டன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையக அலுவலா் ஒருவா் கூறியது: லோயா்கேம்ப் குமுளி மலைச் சாலை வழியாக சில நாள்களுக்கு மட்டும் சிமென்ட், கற்கள், மணல் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மற்ற வாகனங்கள், பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றாா். தற்போது லோயா் கேம்ப்- குமுளி சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.

10 மாதங்களுக்குப் பிறகு: பொது முடக்கக் காலத்தில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதிக்குப் பிறகு, தமிழகத்திலிருந்து, கேரளத்துக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பிறகு முதல் முதலாக புதன்கிழமை முதல் குமுளிக்கு பேருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னா் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் குமுளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. இதே போல் கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை, நெடுங்கண்டம் பேருந்துகளையும், தமிழக அரசு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com