கம்பம்: தேனி மாவட்டத்தில் முதுமக்கள் தாழி உள்ளதை தொல்லியல்துறை கல்லூரி மாணவி கண்டுபிடித்து மேலும் கல்லூரி மூலம் ஆய்வு நடத்தி, அரசுக்கு தெரிவித்து, பாதுகாக்க ஏற்பாடு செய்யகோரி உள்ளார்.
தேனி மாவட்டம் காக்கில் சிக்கையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டிக்குமார் என்பவர் மகள் கவிபாரதி. இவர் தஞ்சாவூர் அரசு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல் பிரிவில் கடல் சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த மாணவி, குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள உறவினர் தோட்டத்திற்கு சென்றார். அங்கு தோட்ட வேலைக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதை பார்த்த போது முதுமக்கள் தாழியினை அடையாளப்படுத்தும் விதமாக புதை குழியில் மண்ணால் ஆன பெருங்குளுக்கை இருப்பதை பார்த்தார். அதனை மேலும் தோண்டியதில் முன்னோர்கள் இறப்பின் போது பயன்படுத்தும் முதுமக்கள் தாழியில் உள்ள சின்னஞ்சிறு ஈமச்சடங்கு செய்த மண் பாண்டங்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த பழங்கால பொருட்கள் பற்றி தனது கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாதிரிகளை சேகரித்தார். இது பற்றி மாணவி கவிபாரதி கூறுகையில் நம் முன்னோர்கள் இறந்த பின் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளும் விதமாக முதுமக்கள் தாழி இருக்கிறது.
தனது கல்லூரிக்கு மாதிரிகளை கொண்டு சென்று ஆய்வு செய்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, அவற்றை பாதுகாக்க தனது கல்லூரி மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார். பழைய வரலாற்று சுவடுகளை பாதுகாக்க, ஏற்பாடு செய்யும் மாணவி கவிபாரதிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.