கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்பில் குறுவனூத்து பாலம் அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கம்பம் நகராட்சி மற்றும் கே.கே.பட்டி, கோம்பை, தேவாரம், பண்ணைபுரம் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது, 10 நாள்களுக்குப் பின் நிலைமை சீராகும் என்று நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து நீரேற்று நிலையம் அமைத்து, அங்கிருந்து குடிநீர் ராட்சத குழாய் மூலம் நெடுஞ்சாலை வழியாக கம்பம், கூடலூர், கே.கே.பட்டி, கோம்பை, பண்ணைபுரம், தேவாரம் ஆகிய 2 நகராட்சி, 4 பேரூராட்சி பகுதிகளுக்கு விநியோகம் நடைபெறுகிறது.
திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு குறுவனூத்து பாலத்தின் ஓரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றது.
அப்போது மண்சரிவு ஏற்பட்டு, பாலம் இடிந்து, அதன் மீது உள்ள கே.கே.பட்டி, கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம் ஆகிய ஊர்களுக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து விழுந்தது.
இதனால் 4 பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம், திங்கள்கிழமை மாலை முதல் துண்டிக்கப்பட்டது.
அதன்பின் அதன் அருகில் உள்ள கம்பம் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ராட்சத குழாயும் உடைந்தது. இதனால் தற்போது, கம்பம் நகராட்சி பகுதிக்கும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கம்பம் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு வரும் 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை தீவிரப்படுத்தவும், குழாய் உடைப்பை சரி செய்யவும் நகராட்சி, பேரூராட்சி பொறியாளர்கள் கூட்டு குடிநீர் திட்ட வாரிய அதிகாரிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம் நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் கூறியது,
தற்போது கம்பம் நகரில் கெளமாரியம்மன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோயர் கேம்ப் குறுவனூத்து பாலத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.
இதன் காரணமாக 10 நாள்களுக்கு கம்பம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. மாற்று திட்டமான சுருளியாற்றிலிருந்து கம்பம் நகருக்கு குடிநீர் விநியோகம் நேரம் குறைத்து கொடுக்கப்படும். பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.