போடியில் ஞாயிரன்று பொதுமுடக்கையொட்டி சாலைகள் வெறிச்சோடின. காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஓமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் இதனை தவிர்க்க தமிழக அரசு இரவு நேர பொதுமுடக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கும் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு 10 மணி முதலே முழு பொதுமுடக்கு தொடங்கியது.
போடியில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. போடி நகரில் முக்கிய சாலைகளான காமராசர் சாலை, மீனாட்சி தியேட்டர் லைன், பெரியாண்டவர் நெடுஞ்சாலை, உத்தமபாளையம் சாலை உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதையும் படிக்க | அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?
பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. டாஸ்மாக் மதுக்கடைகள், தினசரி காய்கறி சந்தை, கீரைக்கடை காய்கறி சந்தை ஆகியவையும் செயல்படவில்லை.
கோவில்களும் திறக்கப்படவில்லை. போடி தேவர் சிலை, திருவள்ளுவர் சிலை, கட்டபொம்மன் சிலை, போஜன் பார்க், பழைய பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடஙகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு வாகனங்களில் வருவோருக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.