கம்பம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள முதல் போக பாசனத்திற்காக புதன்கிழமை, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நன்செய் நிலங்களுக்கு, முதல் போக சாகுபடிக்கு தலைமதகு பகுதியிலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். இதில் பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்கு 100 கன அடியும் என விநாடிக்கு மொத்தம் 300 கன அடி தண்ணீர் சென்றது.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன், கூடலூர் நகர் மன்றத் தலைவர் பத்மாவதி லோகந்துரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பயன்பெறும் நிலங்கள்
இன்று திறக்கப்பட்ட தண்ணீரால் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நன்செய் நிலங்களில் முதல் போக சாகுபடி நடைபெறும். இன்று (ஜூன் 1) முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.