கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,016 கன அடியாக இருந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம் 135.60 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 6,017 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,114 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் விநாடிக்கு 2,016 கன அடியாக இருந்தது.
இரச்சல் பாலம்
பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் அதாவது, புதன்கிழமை விநாடிக்கு 1,855 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், வியாழக்கிழமை விநாடிக்கு 2,016 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கூடுதலாக விநாடிக்கு, 161 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் லோயர் கேம்ப் பெரியாறு அணையில் மின்சார உற்பத்திக்கு விநாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் போக, மீதம், 416 கன அடி தண்ணீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரச்சல் பால ஆற்றில் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது.
மின்சார உற்பத்தி
லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளில் தலா, 42 மெகாவாட் என மொத்தம், 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, மின்சார உற்பத்தி கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் உற்பத்தி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.