உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சாலை மறியல் மேற்கொண்டனர். உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு தேவையான குடிநீரை பேரூராட்சி நிர்வாகம் விநியோகம் செய்து வருகிறது.
இதற்காக மாதம் ரூ.100 வீதம் குடிநீர் இணைப்புக்கு வசூல் செய்யப்படுகின்றன. அதன்படி வாரத்தில் இரண்டு முறை என மாதம் 8 முதல் 9 முறை குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இன்னிலையில் 11-வது வார்டு கோட்டைமேடு , சுங்கச்சாவடி, கருப்பட்டி சந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 10 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
இதையும் படிக்க: ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழு: கே.பி.முனுசாமி
இதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலையின் குறுக்கே காலி குடங்களை வைத்து மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
சம்பவ இடத்துக்கு சென்ற உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.