கம்பம் பகுதியில் உள்ள செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் கூடலூர், க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பையைச் சேர்ந்த செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50 செங்கல் காளவாசல்கள் உள்ளன. இங்கு சுமார் 350 குடும்பத்தினர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு 2021- 22 - ஆம் ஆண்டு சம்பள உயர்வு ரூ 115 சேர்த்து நாளொன்றுக்கு கூலியாக ரூ 885 வழங்கப்பட்டது. நடப்பாண்டில் கடந்த ஆண்டைப்போல ரூ 115 சேர்த்து வழங்க கோரிக்கை வைத்தனர். ஆனால் செங்கல் காளவாசல்கள் உரிமையாளர்கள் சம்பள உயர்வு தர மறுத்துள்ளனர்.
இதனால் செங்கல் காளவாசல்களில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்கள் சுமார் 300 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜன.16 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி செங்கல் அறுவைத்தொழிலாளர் நலச்சங்க தலைவர் வி.பி.முருகேசன் கூறும்போது, சராசரியாக செங்கற்கள் 1000 ரூ 6 ஆயிரத்துக்கு விற்பனையானது.
அப்போது எங்கள் சம்பளம் கடந்த ஆண்டு ரூ 885 வாங்கினோம். அந்த கால கட்டத்தில் 1000 செங்கற்கள் ரூ 6,500, முதல் 7,500 வரை விற்பனையானது. ஆனால் நாங்கள் பழைய கூலியான ரூ 885 தான் வாங்கினோம். இந்தாண்டு கடந்த ஆண்டைப்போல் ரூ 115 தான் சேர்த்து கேட்கிறோம். மேலும் காளவாசல்களில் வேலை செய்யும் பெண்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவும் கோரியுள்ளோம் என்றார்.
இதுபற்றி செங்கல் காளவாசல் உரிமையாளர் கிங்ஸ்லின்ராஜ் என்பவரிடம் கேட்ட போது, வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சம்பள உயர்வு கடந்த 2022 ஆண்டில் வழங்கப்பட்டு ஒப்பந்தம் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து செய்யப்படுள்ளது. தற்போது வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். அது பற்றி பேச்சுவார்த்தை உரிமையாளர்கள் பேசி வருகின்றனர் என்றார்.