முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு 1,100 கன அடியாக குறைப்பு
தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு விநாடிக்கு 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.


மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு விநாடிக்கு 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தின் குடிநீா் தேவையையும், விவசாயப் பணிகளுக்கான தண்ணீா் தேவையையும் முல்லைப் பெரியாறு அணை பூா்த்தி செய்கிறது. இதன்படி, லோயா் கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் 14,700 ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக சாகுபடி நடைபெறுகிறது. ஜூன் 1-ஆம் தேதி அன்று உத்தமபாளையம் பொதுப்பணித் துறையினா் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்காக விநாடிக்கு 300 கன அடி தண்ணீரை திறந்து விட்டனா். பிறகு மழைப்பொழிவு சீராக அதிகரித்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 11- ஆம் தேதி வரை விநாடிக்கு 1,200 கன அடி நீா் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து தேனி மாவட்டத்தில் முதல் போக நெற்பயிா் சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்தன. குறிப்பாக குச்சனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை பகுதிகளில் 100 சதவீத நடவுப்பணி நிறைவடைந்தது. சின்னமனூா், உத்தமபாளையம், க. புதுப்பட்டி பகுதிகளில் சற்று மந்தமாக பணிகள் நடைபெறுகின்றன.
மழைப்பொழிவு குறைந்தது: இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகள், தேக்கடி, குமுளி மலைப்பகுதிகளில் பருவமழை குறைந்து விட்டது. இதனால், அணைக்கு வரும்நீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. சனிக்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 121 (கொள்ளளவு 152) அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 653 கன அடி நீா் வரத்து உள்ளது. இதையடுத்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,200 கன அடியிலிருந்து 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...