அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யும் திட்டம் குறித்து ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் வட்டார வளமையத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டரங்கில் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் பற்களின் பணிகள், பல் நோயின் வகைகள், அவற்றைத் தடுக்கும் வழி முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சியைத் தொடங்கி வைத்து குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் எம்.சரோஜா கூறியதாவது:
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து இப் பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் பல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல் பரிசோதநை நடத்தப்படவுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு பல் பரிசோதனையை பள்ளி ஆசிரியர்களும், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்களும் மேற்கொள்வார்கள். பல் நோயினால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு பள்ளிகளின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பல் மருத்துவர் மூலமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு பல் நோய்களே காரணமாக இருப்பதுண்டு. தமிழக அரசின் இத்திட்டத்தினால் குழந்தைகள் ஆரோக்கியமான பற்களைப் பெற்று நோயில்லாமல் வாழ வழி ஏற்படும் என்றார் டாக்டர் சரோஜா.
பயிற்சியில் ஒவ்வொரு வட்டார வளமையத்திலிருந்தும் தலா 20 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் த.சுகந்தி மரகதவள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு மற்றும் வத்திராயிருப்பு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.