காரியாபட்டி பேரூராட்சி சார்பில் நடப்பு நிதியாண்டில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி, தார்ச் சாலை அமைக்கும் பணி, ஊருணி பராமரிப்புப் பணி, வாருகால் அமைக்கும் பணி போன்றவைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் காரியாபட்டிக்கு வருகை தந்து திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரூராட்சி திருமண மண்டபம் அருகே வாருகால் பணிகளை பார்வையிட்டு இரு பக்கத்திலும் தடுப்புச்சுவர், பாலம் அமைக்க கேட்டுக் கொண்டார்.
பஸ் நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையை பார்வையிட்ட அவர், அங்குள்ள குறைபாடுகளை ஒரு வார காலத்திற்குள் சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
என்.ஜி.ஓ. நகர் பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகளை பார்வையிட்டு தரமான ஜல்லிகளை வைத்து முறையாக சாலை அமைக்க பேரூராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
என்.ஜி.ஓ. நகர் மயானச் சாலை சீரமைக்கும் பணியினையும் பார்வையிட்டார். சாலை ஓரத்தில் வாருகாலில் உள்ள முள்செடிகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், வீதிகளின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றி, ஆக்கிரமிப்பு இருந்தால் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து அகற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பேரூராட்சி தலைவர் காந்திமதி பழனி கேட்டுக் கொண்டபடி, தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் தினமும் 15 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது பேரூராட்சித் தலைவர் காந்திமதி பழனி, உதவி இயக்குனர் தெய்வநாயகம், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் புஷ்ப லதா, செயல் அலுவலர் பூங்கொடி முருகு உள்பட பலர் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.