ஸ்ரீவில்லிபுத்தூரில் மரம் வளர்ப்பு குறித்த இளைஞர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட வனவியல் விரிவாக்க கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீட்ஸ் நிறுவனம் மூலமாக தமிழ்நாடு அரசு வனத்துறையின் சார்பாக தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கு மரம் வளர்ப்பு மற்றும் உற்பத்தி தொழில் நுட்பம் குறித்த பயிற்சியை ஸ்ரீவில்லிபுத்தூர் வனவியல் விரிவாக்க மையத்தில் நடத்தியது.
நீட்ஸ் நிறுவனத் தலைவர் வழக்குரைஞர் ராஜகோபால் வரவேற்றார். பயிற்சிக்கு வனவியல் விரிவாக்க அலுவலர் அரசப்பன் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு இளைஞரின் கடமை. எனவே இளைஞர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட வேண்டும் என்றார். மேலும் மரம் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
தலைமை வனக்காவலர் பசல்முகமது, மரங்களும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். பயிற்சியில் சாத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்தவர்களுக்கு மண்வெட்டி, பூவாளி, மர வளர்ப்பு பண்ணை ஏற்படுத்துவதற்கு தேவையான பைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு மரங்கள் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள் குறித்த கையேடும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீட்ஸ் நிறுவனம் செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







