விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள வலுக்கலொட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளர் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் விவசாயிகள் நகை கடன் மற்றும் விவசாயத்திற்கு தேவையான உரங்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
வலுக்கலொட்டி கூட்டுறவு வங்கியின் கீழ் வலுக்கலொட்டி, நாகம்பட்டியில் ரேஷன் கடைகள் உள்ளன. இந்த வங்கியில் பணியாற்றிய செயலாளர் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். இதுவரை செயலாளர் நியமனம் செய்யப்படவில்லை. இரண்டு ரேஷன் கடைகளிலும் ஒரு விற்பனையாளர் பணியாற்றி வந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேஷன் பொருட்களை கடத்தியதாக விற்பனையாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். புதிய விற்பனையாளர் நியமனம் செய்யப்படாததால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை.
விவசாயிகள், கிராம பொதுமக்கள் அவசர தேவைக்கு வங்கியின் நகைக்கடன் பெற முடியவில்லை.
வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்பவும் முடியாமல் தவிக்கின்றனர். இதுபற்றி வங்கி இயக்குநர் ரவீந்திரன் கூறியதாவது: வங்கியில் செயலாளர், எழுத்தர், விற்பனையாளர், காவலர், கணிணி இயக்குநர் என அனைத்து பணியிடங்களும் காலியாக உள்ளன. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாற்காலிகமாக ஒரு விற்பனையாளரை நியமிக்க வங்கி நிர்வாகக்குழுவில் தீர்மானம் போட்டு அதிகாரிகளுக்கு அனுப்பியும் அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவில்லை.
வங்கியில் பணியாளர்கள் இல்லாததால் தற்போது நகைகளையும், ரேஷன் பொருட்களையும் வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றார். வங்கியில் பரிதாப நிலை குறித்து கூட்டுறவு துறை உயர்அதிகாரிகளிடம் கேட்டபோது பதில் கூற மறுத்து விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.