விருதுநகர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் பூ மற்றும் காய் உதிர்தலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில், மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள பருத்தியில், கடந்த இருமாதங்களாக பெய்த மழையால், பூ மற்றும் காய்கள் திடீரென உதிர ஆரம்பித்துள்ளன.
இதனைத் தடுக்க விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். பூ மற்றும் காய் உதிர்தலுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் சமவிகிதமற்ற தன்மை காரணமாகும்.
இதனைத் தவிர்க்க பருத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்த கலவையான டி.என்.ஏ.யூ. பருத்தி பிளஸ் தெளிக்க வேண்டும். இதனால், பூ மற்றும் காய் உதிர்தலை தடுத்து 18 சதவீதம் அதிக விளைச்சல் பெற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
டி.என்.ஏ.யூ. பருத்தி பிளஸ் பயன்படுத்தும் முறை: பருத்தியில் பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 2.5 கிலோ டி.என்.ஏ.யூ. பருத்தி பிளஸ் கலவையை 200 லிட்டர் நீர் மற்றும் தேவையான ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பருத்தி, மக்காசோளம், பயறு மற்றும் நிலக்கடலை வளர்ச்சி ஊக்கிகள், நுண்ணுயிரிகள் மற்றும் தீவனப்புல் விதைகள் அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அறிவியல் நிலையத்தில் கிடைக்கும். விவசாயிகள் 04566 220561 என்ற எண்ணை தொடர்புகொண்டு விபரம் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.