அடிகுழாயை பழுது நீக்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

பழுதான அடிகுழாயை கடந்த ஒரு மாதமாக சீரமைக்காததைக் கண்டித்து, விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை ஒளவையார் தெரு பொது மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
Updated on
1 min read

பழுதான அடிகுழாயை கடந்த ஒரு மாதமாக சீரமைக்காததைக் கண்டித்து, விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை ஒளவையார் தெரு பொது மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
    விருதுநகர் நகராட்சிப் பகுதியில் தற்போது பத்து நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இதனால், பொதுமக்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள அடிகுழாய்  மூலம் தண்ணீர் எடுத்து வீட்டு தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்து வருகின்றனர்.
     இந்நிலையில், 22 ஆவது வார்டுக்குள்பட்ட  ஒளவையார் தெருவில் உள்ள அடிகுழாய் கடந்த மாதம் பழுதாகியது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டுத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக, அருகே உள்ள தெருக்களில் உள்ள அடிகுழாய் மற்றும் சிறிய மோட்டார் பம்ப் குடிநீர் தேக்கத் தொட்டியில்   தண்ணீர் பிடிக்கச் செல்லும்போது, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறுகின்றனர்.      எனவே, பழுதடைந்த அடி குழாயை சீரமைக்க வேண்டும் என, நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஒளவையார் தெரு பொதுமக்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் தலைமையில், நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.     அதையடுத்து, பொதுமக்களிடம் நகராட்சி ஆணையர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வெள்ளிக்கிழமைக்குள் அடிகுழாய் பழுது நீக்கம் செய்யப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com