சிவகாசியில், சீல் வைக்கப்பட்ட திருட்டு சிடி கடையை திறக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருட்டு விடியோ தடுப்பு காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் காவேரி நகரில் அறிவுசார் சொத்துரிமை அமுலாக்கப் பிரிவு காவல் நிலையம் உள்ளது. இக்காவல் நிலைய போலீஸார் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திருட்டு விடியோ, பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக தயாரிக்கப்படும் பொருள்கள் ஆகியவை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இக்காவல் நிலைய போலீஸார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசியில் திருட்டு சிடி விற்பனை தொடர்பாக ஒரு கடையை ஆய்வு செய்து சீல் வைத்தனர். மேலும், அக்கடை உரிமையாளரான திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (32) மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விருதுநகரில் உள்ள அமலாக்கப் பிரிவு காவல் நிலயத்திற்கு பிரகாஷ் வந்துள்ளார். அப்போது, அவரிடம் கடையை தொடர்ந்து நடத்த மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என காவல் ஆய்வாளர் கமலி பாரதி மற்றும் தலைமை காவலர் முருகேசன் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரகாஷ், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ. 5 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழங்கினர். புதன்கிழமை மாலை காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர் கமலி பாரதியிடம் பிரகாஷ் அந்த பணத்தைக் கொடுத்துள்ளார். அதை கமலி பாரதி, தலைமைக் காவலர் முருகேசனிடம் வழங்குமாறு கூறியுள்ளார்.
பின்னர், லஞ்ச பணத்தை முருகேசன் பெற்றுக்கொண்டபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை கையும் களவுமாகப் பிடித்தனர். இருவரையும் கைது செய்து லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.