விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2018-19 ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வியாழக்கிழமை வெளியிட்டார்.
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) விருதுநகர் மாவட்டத்திற்கான 2018-19 ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது.
மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.7430.34 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.
இந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியது: விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது. இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும்.
வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த அறிக்கையின் உதவியுடன் விருதுநகர் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்ட அறிக்கையை ஒரு முன் மாதிரியாக வைத்து தங்களது
கிளைக்கான கடன் திட்ட குறியீட்டை தயாரித்து, அதை குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட முன்னோடி வங்கி யில் (ஐ.ஓ.பி), மாவட்ட வங்கி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் (பாரத ரிசர்வ் வங்கி) சுரேஷ்குமார்வேணு, முதுநிலை மண்டல மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) உமா மஹேஸ்வரி, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் கலைச்செல்வன், வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.