அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகரில் கட்டிமுடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியால் அரசு நிதி வீணாகிவருவதுடன், சீரான குடிநீர் விநியோகமும் பல ஆண்டுகளாகத் தடைப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட, அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகர் கிழக்கு, சொக்கலிங்கபுரம், சத்தியவாணிமுத்து நகர், நேருநகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்திடவும், புதிய பல குடிநீர் இணைப்புகள் வழங்கிடவும் எம்.டி.ஆர்.நகரில் கடந்த 2010-11ஆம் நிதியாண்டில் ரூ.99 லட்சம் செலவில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர்த் தேவை உள்ளநிலையில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள வைகை திருப்புவனம் திட்டம், தாமிரவருணிக் கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் மூலம் சராசரியா25 முதல் 35 லட்சம் லிட்டர் குடிநீரே கிடைத்து வருகிறது.
இதனால் அருப்புக்கோட்டை நகராட்சியில் 15 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை வீதமே குடிநீர் விநியோகம் செய்யவேண்டிய நெருக்கடியும், அதனால் குடிநீர்த்தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இவ்விதம் தேவைக்கும் குறைவான குடிநீர் வரத்தைக் காரணம் காட்டி இம்மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பயன்பாட்டிற்குக் கொண்டுவராமலேயே காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இச்சூழ்நிலையில் அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர்நகராட்சிகள் பயன்பெறும் விதமாக தற்போது ரூ.450 கோடி நிதியில் புதிய 3ஆவது தாமிரவருணி கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால், அத்திட்டம் மூலம் கிடைக்கும் கூடுதல் நீரைக்கொண்டு எம்.டி.ஆர்.நகர் நீர்த்தேக்கத்தொட்டியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து, அது சார்ந்த குடியிருப்புகளுக்கு 5 நாள்களுக்கு ஒருமுறைவீதம் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி குடியிருப்புவாசிகள் நகராட்சிக்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.