அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியை அடுத்த மறவர்பெருங்குடியில் திருமணமாகி நான்கே நாள்களில் சாலை விபத்தில் சிக்கிய புதுப்பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது பெற்றோர் சம்மதத்துடன் அவரது இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியை அடுத்த சுத்தமடம் எனும் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகள் முத்துமாரி(24). இவருக்கும் மறவர்பெருங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் சங்கர்ராஜ் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுமணத் தம்பதியர் பந்தல்குடியிலுள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு கடந்த 16ம் தேதி விருந்துக்குச்சென்ற நிலையில் 17ம் தேதி மீண்டும் மறவர்பெருங்குடியிலுள்ள தங்கள் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் கிளம்பினராம்.
பின்னர் சிறிது தொலைவே சென்ற நிலையில், ஒரு சாலை வளைவில் முத்துமாரி இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழந்ததில் தலையில் பலத்த காயமேற்பட்டதாம். உடனடியாக அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனராம்.
ஆனால் சிகிச்சை பலனின்றி 17ம் தேதி இரவு முத்துமாரி உயிரிழந்துவிட்டாராம். இதையடுத்து முத்துமாரியின் பெற்றோரும், கணவர் குடும்பத்தாரும் ஒன்றாகக் கலந்து ஆலோசனை செய்தபின், அவரது நுரையீரல், கல்லீரல், இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களைத் தானம் செய்தனராம்.
முத்துமாரியின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதனிடையே திருமணமாகி நான்கே நாள்களில் புதுப்பெண் விபத்தில் உயிரிழந்தது அவரது கிராமத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.