அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை பாரம்பரிய கலாச்சார முறையில் ஸ்ரீசரஸ்வதி தேவி சந்நிதானத்தின் முன்பாக குழந்தைகளை அ எழுத வைத்து மகிழ்ச்சியுடன் கல்வியைத் தொடங்கி பெற்றோர்கள் மகிழ்ந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீமீனாட்சி உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளன்று குழந்தைகளை முதன்முதலாக அ எழுதச்செய்து பக்தியுடன் சரஸ்வதி தேவியின் அருள்பெற்று கல்வியைத் தொடங்க வேண்டுமென்பது பொதுமக்களின் விருப்பமாகும்.
இந்த ஆண்டு கரோனா தொற்றுத்தடுப்பு விதிமுறைகளின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், புத்தாடை அணிவித்து தங்களின் குழந்தைகளுடன் இக்கோவிலுக்கு வந்த பெற்றோர் பாரம்பரிய கலாச்சார முறைப்படி அருள்மிகு சரஸ்வதி தேவி சந்நிதானம் முன்பாக வணங்கி, முதன்முதலாக தங்கள் குழந்தைகளுக்கு அ எழுத உற்சாகத்துடன் கற்றுக் கொடுத்தனர்.
அதையடுத்து சரஸ்வதி தேவி முன்பாக காயத்திரி மந்திரம், சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம் சொல்லியும் பெற்றோர்கள் சிறப்பு வழிபாடும் நடத்தினர். இந்த ஆண்டு விதிகள் தளர்த்தப்பட்டு கோவில் திறக்கப்பட்டதால், குழந்தைகளுக்கு பாரம்பரிய முறைப்படி சரஸ்வதி தேவி முன்பாக அ எழுதவைத்தது பெற்றோர்களாகிய எங்களுக்கு பெருமகிழ்ச்சி என கருத்து தெரிவித்தனர்.