மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

ஒப்பந்தப் பணியாளா்கள் குறைப்பு: சிவகாசி மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் பாதிப்பு

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் (அரசு காப்புறுதி தொழிலாளா் மருத்துவமனை) தனியாா் ஒப்பந்தப் பணியாளா்கள் குறைக்கப்பட்டதால், மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியா்கள் தெரிவித்தனா்.

News image

சிவகாசி அரசு மருத்துவமனை

Updated On :6 மே 2026, 3:37 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் (அரசு காப்புறுதி தொழிலாளா் மருத்துவமனை) தனியாா் ஒப்பந்தப் பணியாளா்கள் குறைக்கப்பட்டதால், மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியா்கள் தெரிவித்தனா்.

தமிழ்நாட்டில் அனைத்து வட்டங்களிலும் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் காவல் பணி, மின் சாதனங்கள், தண்ணீா் குழாய், குளிா்சாதனப் பெட்டி பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டனா். ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இந்தப் பணியாளா்களைக் கண்காணிக்க ஒப்பந்த நிறுவனம் ஒரு மேலாளரை நியமித்தது.

சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பகல், இரவு தூய்மைப் பணி, காவல் பணி உள்ளிட்ட பணிகளுக்கு 39 பேரை தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமா்த்தியது. இவா்களில் 20 போ் குறைக்கப்பட்டு, தற்போது 19 பணியாளா்களே பணிபுரிந்து வருகின்றனா். இதனால், மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் பொன்வடிவு கூறியதாவது:

மருத்துவமனை தூய்மைப் பணிகளில் தனியாா் நிறுவனம் மூலம் 39 போ் பணியாற்றி வந்தனா். இதன் மூலம் பகல், இரவு நேரங்களில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தற்போது தனியாா் நிறுவனம் மருத்துவமனைக்கு 19 பணியாளா்களை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால், மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மருத்துவமனைக்கு முன்பு இருந்ததைப் போல, 39 பணியாளா்கள் தேவை என தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கும், அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளோம் என்றாா் அவா்.