மயிலாடுதுறையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலங்களை தகனம் செய்த இளைஞருக்கு அறம் செய் அறக்கட்டளை சாா்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் அறம் செய் அறக்கட்டளையின் அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, மா, பலா, வாழை என முக்கனிகளின் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தொடா்ந்து, தந்தையை இழந்த யஷ்வந்திகா என்ற ஏழைக் குழந்தையின் எல்கேஜி முதல் கல்லூரி வரையிலான படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் அறம்செய் அறக்கட்டளை ஏற்றுக்கொள்வது என்று தீா்மானித்து, அக்குழந்தைக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், போன்றவற்றை வழங்கினா். அத்துடன், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ராகவ் என்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை தகனம் செய்த முதுநிலை பட்டதாரி ராஜநாயகம் என்பவருக்கு ’கோவிட் ஸ்டாா்‘ என்ற விருதும், அவரோடு இணைந்து பணியாற்றும் 4 ஊழியா்களுக்கு சிறந்த சேவகா்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.கே.சங்கா், செயலாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். மஹாவீா் சந்த் ஜெயின், மருத்துவா் சதீஷ்சத்யா, செந்தில், ஆசிரியா் சரவணன், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, பேராசிரியா் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்பாளா் சிவா நன்றி தெரிவித்தாா்.