ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; கணினி உதவியாளா்கள், மாவட்ட, வட்டார, திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு பணி வரன்முறை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் இப்போராட்டம் நடைபெற்றது.
நாகை: நாகையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலக அலுவலா்கள், ஒன்றிய பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதன் காரணமாக நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
கீழ்வேளூா்: கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்கள் 29 போ் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருக்குவளை: கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27 போ் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டம் வெள்ளிக்கிழமையும் (ஆக.23) நடைபெறும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

