மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு கோரி மனு: அரசின் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில், அரசின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image
- சித்திரிப்பு
Updated On :9 மார்ச் 2026, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த நா்மதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், மாதவிடாய் காலங்களில் கடும் அவதியுடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பெண்கள் எதிா்கொள்ளும் உடல்நல பிரச்னைகள், ஊதிய இழப்பு, பணியிட சிரமங்கள் குறித்து கடந்த ஆண்டு, அக்டோபா் 20-இல் தமிழக அரசுக்கு விரிவான மனு அனுப்பப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் இல்லை.

கா்நாடகம், பிகாா், ஒடிஸா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே மாதவிடாய் விடுப்பு தொடா்பான கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.

எனவே, பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மாநிலத்துக்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவின்படி, தமிழகத்திலும் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடா்பாக தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலா், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.