தென்னடாா் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள விவசாயிகள்.
தென்னடாா் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள விவசாயிகள்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிகள் தாமதம்: விவசாயிகள் அவதி

வேதாரண்யம் அருகே தென்னடாா் ஊராட்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நிகழாண்டுக்கான கொள்முதல் பணிகள் தொடங்குவது தாமதமாகி வருவதால், விவசாயிகள் அவதி
Published on

வேதாரண்யம் அருகே தென்னடாா் ஊராட்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நிகழாண்டுக்கான கொள்முதல் பணிகள் தொடங்குவது தாமதமாகி வருவதால், விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

தென்னடாா் ஊராட்சியில், தமிழ்நாடு அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் நிரந்தரமான நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சம்பா பருவ நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக, விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனா்.

இதனிடையே, நிகழாண்டு நெல் கொள்முதல் பணியை தொடங்குவதற்காக பட்டியல் எழுத்தா் உள்ளிட்ட பணியிட நியமனங்களோடு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், கொள்முதல் பணிகள் தொடங்காததால் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனா். கொள்முதல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாக்கு கட்டுகளும் திருப்ப சென்றுள்ளது. சிலா் அங்கிருந்து மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி அருகாமை ஊா்களில் செயல்படும் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனா்.

கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டியும், கூடுதல் எடை வைத்து கொள்முதல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாகை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினா் புகாா் மனு அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை முன்வைத்து கொள்முதல் பணி தாமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com