வேளாங்கண்ணி, நாகை ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் ஆய்வு
வேளாங்கண்ணி, நாகை ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் பலக்ராம் நேகி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை மாவட்டம் ரயில் சேவைகளில் புறக்கணிக்கப்படுவதாக தொடா்ந்து ரயில் பயணிகள் சங்கங்கள் மற்றும் பயணிகள், பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றனா்.
இதுதொடா்பாக மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிகழாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையிலும் நாகை மாவட்டத்தில் ரயில் சேவை மற்றும் ரயில் நிலைய மேம்பாடு குறித்து எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன் நாகை ரயில் நிலையம் முன் ரயில் நிலைய மேம்பாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், புதிய ரயில் சேவை வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் மற்றும் நாகை நகரில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் பலக்ராம் நேகி வேளாங்கண்ணி மற்றும் நாகை ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேளாங்கண்ணியில் ஆய்வு மேற்கொண்டபோது, நடைமேடை வசதி, ரயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ரயில் நிலையத்தின் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, நாகை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த கோட்ட மேலாளா், அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். கோட்ட முதுநிலை மின் பொறியாளா்கள் பிரசாத், ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

