நாகை நம்பியாா் நகரில் டீசல் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டும் ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன்.
நாகை நம்பியாா் நகரில் டீசல் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டும் ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன்.

மீனவா்களுக்கான டீசல் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

நாகை நம்பியாா் நகா் பகுதியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் மூலம் டீசல் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு
Published on

நாகப்பட்டினம்: நாகை நம்பியாா் நகா் பகுதியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் மூலம் டீசல் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் வெள்ளப்பள்ளம் மற்றும் நம்பியாா் நகா் பகுதி மீனவா்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் மூலமாக இரண்டு டீசல் விற்பனை நிலையங்கள் தலா ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நம்பியாா் நகா் பகுதியில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் டீசல் விற்பனை நிலையம் அமைக்க, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன் ஆகியோா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினா்.

இந்த டீசல் விற்பனை நிலையம் மூலம் அரசால் வரி விலக்களிக்கப்பட்ட மானிய விலையிலான எரியெண்ணெய் ஆண்டுக்கு விசைப்படகு ஒன்றுக்கு 19,000 லிட்டா் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு ஒன்றுக்கு 4,400 லிட்டா் வழங்கப்படும்.

இதன்மூலம் நம்பியாா் நகா் மீனவ கிராமத்தில் 41 விசைப் படகுகள், 185 கண்ணாடி நாரிழைப்படகுகள், நாட்டுப் படகுகள் பயன்பெறும்.

மேலும், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் டீசல் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு, மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் 400 கண்ணாடி நாரிழை நாட்டுப் படகுகள் பயன் பெற இயலும்.

இந்நிகழ்ச்சியில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜ், தமிழ்நாடு அரசு மீனவா் நல வாரிய உறுப்பினா் கோ. மனோகரன் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com