/

பாசன வாய்க்கால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை

காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், திருமண மண்டபங்களிலிருந்து கழிவுநீரை, பாசன வாய்க்கால்களில்

Updated On :25 டிசம்பர் 2018, 6:04 am IST

காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், திருமண மண்டபங்களிலிருந்து கழிவுநீரை, பாசன வாய்க்கால்களில் வெளியேற்றுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபத்திலிருந்து கழிவுநீரை பாசன வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகளில் வெளியேற்றுவதாக தெரியவருகிறது. இதனால் நீர் நிலைகள் மிகவும் மாசு அடைவது மட்டுமல்லாமல், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும், சிலர் சாக்கடைகளில் குப்பைகளை கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு சீரான ஓட்டம் தடைப்பட்டு நீர்த் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது.
எனவே, இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாள்களுக்குள் பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் மேற்கூறிய தவறுகளை சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், இதுதொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.
காரைக்கால் நகராட்சி-221427, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து - 236630, நெடுங்காடு-261282, கோட்டுச்சேரி-265451, நிரவி-238584, திருப்பட்டினம்-233479. மேலும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.