கடற்கரை சாலையையொட்டிய அரசலாற்றுப் பகுதியில் படகுகள் கட்டுவதை கைவிடவேண்டும் என மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கட்டுவதற்கு மீன்பிடித் துறைமுகத்தை புதுச்சேரி அரசு அமைத்துத் தந்துள்ளது. ஆனால், சில விசைப்படகுகள், கண்ணாடி நுண்ணிழைப் படகுகள் அரசலாற்றின் வடக்கு கரைப் பகுதியில் நிறுத்தப்படுகிறது. இந்த பகுதியில் படகுகளை நிறுத்தவோ, மீன்பிடி சாதனங்கள் கடற்கரை சாலையில் வைக்கவோ கூடாது என அரசு நிர்வாகம் கூறுவது உதாசீனப்படுத்தப்படுகிறது. கடற்கரை சாலை மாசுபடும் வகையிலும், மீன் இறக்குதல், வலை பின்னுதல், உபகரணங்களை வைத்தல் போன்ற செயல்கள் கடற்கரை சாலையில் செய்வது கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற செயல்களால் கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள், நடைப்பயிற்சி செய்வோருக்கு பல விதங்களில் இடையூறு விளைவிப்பதாக புகார்கள் வருகின்றன. இதை கடலோர பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை மீனவர்கள் உணர வேண்டும்.
காரைக்காலுக்கு அழகு சேர்க்கும் இந்த கடற்கரையை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசலாற்றில் நிறுத்தப்படும் மீன்பிடி படகுகளை ஆற்றின் தெற்கு பகுதியில் கொண்டு செல்லவும், கடற்கரை சாலையை மீன் இறக்கவோ, பொருள் ஏற்றி, இறக்கும் பகுதியாகவோ பயன்படுத்தக் கூடாது என்பது இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









