காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம்

காரைக்காலில் மாங்கனித் திருவிழா நிறைவாக திங்கள்கிழமை விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. 
காரைக்காலில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்
காரைக்காலில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்
Updated on
1 min read

காரைக்காலில் மாங்கனித் திருவிழா நிறைவாக திங்கள்கிழமை விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. 

ஸ்ரீ பிட்சாடனமூர்த்தி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மற்றும் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. சிவபெருமானால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவராகக் கருதப்படும் புனிதவதியாரின், வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் ஸ்ரீ சுந்தரம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

கரோனா பொது முடக்கத்தால் நிகழாண்டு இத்திருவிழா கோயில் அளவில் நடத்தப்பட்டது. இத்திருவிழா தொடக்கமாக கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை திருக்கல்யாணம், மாங்கனி இறைப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  ஒரு மாத கால நிறைவில் விடையாற்றி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ பிட்சாடனமூர்த்தி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் செய்யப்பட்டன. 

நிகழ்ச்சியில் கோயில் அறங்காவல் வாரியத்தினர், சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள், ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாங்கனித் திருவிழா ஒரு மாத காலமும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் மாங்கனி இறைப்புத் திருவிழா  மற்றும் கலைநிகழ்ச்சிகள், விழா கடைகளில் பொருள்கள் வாங்க குவிந்துவந்த நிலையில், நிகழாண்டு எந்த ஆரவாரமுமின்றி விழா நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com