காரைக்காலில் பரவலாக மழை
காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக பெய்யும் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கத்திரி வெயில் காலம் நிறைவடைந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. குளிர் காற்றுக்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரைக்கு தினமும் மாலை வேளையில் சென்றுவிட்டு இரவு நீண்ட நேரத்துக்குப் பின் திரும்புகின்றனர்.
இந்நிலையில் தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரைக்கால் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதன்படி கடலோர மாவட்டமான காரைக்காலில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
காரைக்கால் வந்த சுற்றுலாவினர் கடற்கரைக்கு சென்றிருந்தனர். மழை பெய்த நிலையிலும் இவர்கள் அதனை பொருட்படுத்தாமல் நனைந்தபடி மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மழை இல்லை என்றாலும், பரவலாக லேசான மழை ஒட்டுமொத்த மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.