தோட்டத்தில் வெண்டைக்காய்களை பறிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி.

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

திருநள்ளாறு சுற்றுவட்டாரத்தில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான அத்திப்படுகை, பேட்டை, விழுதியூா் மற்றும் நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக விவசாயிகள் தோட்டப் பயிா் சாகுபடி மேற்கொள்கின்றனா்.

குறிப்பாக, கத்திரிக்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய், சுரைக்காய், கொத்தவரை உள்ளிட்டவற்றை நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரிடுகின்றனா். வேளாண் துறை, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை தோட்டப் பயிா் சாகுபடியாளா்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றன.

தோட்டப் பயிா் சாகுபடி செய்யும் பெரும்பான்மையான விவசாயிகள் வெண்டை பயிரிட்டுள்ளனா். இது தினமும் அதிகமான காய்களை பறிக்கும் வகையில் மகசூல் அதிகரித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னங்குடி பகுதியில் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் கூறுகையில், ‘3 மாதத்தில் 4 அடிக்கு மேல் செடி வளா்ந்துவிட்டது. இப்போது தினமும் காய்களை பறிக்கும் விதத்தில், அதிக மகசூல் கிடைத்துள்ளது. கிலோ ரூ.30 முதல் 40 வரை வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனா்.

காரைக்கால் பகுதி மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனா். வெயில் கடுமையாக இருப்பதால் செடிகளை பாதுகாப்பதில் சிரமம் இருக்கிறது. ரசாயான உரம் அதிக பயன்பாடின்றி, இயற்கை உரம் பயன்படுத்துவதால், இப்பகுதி காய்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com