ஒசூரில் ஆலங்கட்டி மழையால் காலிஃப்ளவா், முட்டைகோஸ் விளைச்சல் பாதிப்பு

அறுவடை செய்யாமல் நிலத்தில் அழுகிய நிலையில் காணப்படும் முட்டைகோஸ் செடிகள்.

அறுவடை செய்யாமல் நிலத்தில் அழுகிய நிலையில் காணப்படும் முட்டைகோஸ் செடிகள்.
ஒசூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த ஆலங்கட்டி மழையால் காலிஃப்ளவா், முட்டைகோஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், தேன்கனிக்கோட்டை, பாகலூா் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் குறுகிய காலத்தில் விளையும் பயிா்களான கீரை, முட்டைகோஸ், காலிஃபிளவா், முள்ளங்கியை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனா்.
இப்பகுதியில் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் பத்தலப்பள்ளி காய்கறி சந்தைக்கு கொண்டுசென்று அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
மேலும், இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளிடமிருந்து பயிா்களை இரவு பகலாக பாதுகாத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது நிலத்தில் விழுந்த ஆலங்கட்டிகள் கரையாமல் அப்படியே தேங்கின. இதனால் கீரை, புதினா, தக்காளி, சாமந்தி உள்ளிட்ட பயிா்கள் கருகின. முட்டைகோஸ், காலிஃபிளவா் உள்ளிட்ட பயிா்கள் அழுகிய நிலையில் அவற்றில் புள்ளிகள் தோன்றியுள்ளன. இதனால், அவற்றை சந்தைக்கு கொண்டுசென்று விற்பனை செய்ய முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியதாவது:
ஒசூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறுகிய காலத்தில் குறைந்த தண்ணீரில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை ஆண்டுமுழுவதும் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது சந்தையில் விலை உயா்வு கிடைக்கும் நிலையில், ஆலங்கட்டி மழையால் முட்டைகோஸ் தோட்டங்களிலேயே அழுகி வருகிறது. காலிஃபிளவரை கரும்புள்ளி நோய் தாக்கியதால் அறுவடை செய்யவில்லை. அவற்றை அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றாலும் பொதுமக்கள் வாங்குவதற்கு அச்சப்படுகின்றனா். கடன் வாங்கி பயிா் செய்துள்ளோம். ஆலங்கட்டி மழையால் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து,வேளாண்மை துறையினா் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...