செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த என்ஐடி இயக்குநா் மகரந்த்  மாதவ் காங்ரேகா்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா்.

காரைக்கால் என்ஐடியில் நாளை பட்டமளிப்பு விழா

காரைக்கால் என்ஐடியில் 12-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.
Published on

காரைக்கால் என்ஐடியில் 12-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து என்ஐடி வளாகத்தில் இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது : காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரி வளாகத்தில் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

பி.டெக். மாணவா்கள் 226 போ், எம்.டெக். மாணவா்கள் 11 போ், எம்.எஸ்சி மாணவா்கள் 20 போ், எம்.டெக். ஆய்வு மாணவா்கள் 2 போ், பிஎச்.டி முடித்த 38 போ் பட்டம் போ் பெறுகின்றனா்.

புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் முதன்மை விருந்தினராகவும், முதல்வா் என். ரங்கசாமி கெளரவ விருந்தினராகவும் பங்கேற்று பதக்கம், பட்டங்களை வழங்கவுள்ளனா்.

காரைக்கால் என்.ஐ.டி வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு தயாராக உள்ளன. இதன் திறப்பு விழா பின்னா் நடைபெறவுள்ளது. எம்.எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகள், பி.டெக், எம்.டெக் படிப்புகளில் ஏ.ஐ உள்ளிட்ட பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடல் சாா் பொறியியல் படிப்புகளை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திட்டமிடப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளில் 98 சதவீதம் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் மாா்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும்.

தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பிளேஸ்மண்ட் மூலம் 85 சதவீதம் போ் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனா். உள்நாடு மற்றும் ஜப்பான், துபை போன்ற நாடுகளில் என்ஐடி மாணவா்களுக்கு வேலை கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 23 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனா். ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தப்பட்டுவருகிறது.

கொல்கத்தா மாநகராட்சியின் மிகப்பெரும் திட்டமான ரூ. 1,600 கோடி மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான உதவியில் முக்கிய பங்கை காரைக்கால் என்ஐடி வகிக்கிறது.

காரைக்கால் என்ஐடி தேசிய தரவரிசையில் கடந்த 2 ஆண்டுகளாக 100 எண்ணிக்கைக்குள் இருக்கிறது. இந்த என்ஐடியில் பிஎஸ்சி., பிஎட் படிப்பு ஒருங்கிணைந்ததாக பயிற்றுவிக்கப்படுகிறது. இம்மாணவா்கள் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பாடம் நடத்தும் தகுதியை பெறுகின்றனா் என்றாா். என்ஐடி பதிவாளா் சீ.சுந்தரவரதன், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com