தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

முன்னோா்கள் அளித்த ஆயுஷ் மருத்துவத்தை மறந்துவிடக்கூடாது! புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

News image

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் - DD

Updated On :27 ஜூலை 2026, 11:04 pm IST

முன்னோா்கள் விட்டுச்சென்ற சித்தா, ஆயுா்வேதம், மூலிகை உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவத்தை நாம் மறந்துவிடக்கூடாது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

திருநள்ளாற்றில் தருமபுரம் ஆதீனம் மற்றும் தன்வந்தரா ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதாரப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, தருமை ஆதீனம் சம்ஸ்கிருதம், வேத வகுப்புகள், ஜோதிட வகுப்புகள் தொடக்கம், சென்னை அறம் ஐஏஎஸ் அகாதெமியுடன் இணைந்து ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடக்கம், தருமை ஆதீனம் மலிவு விலை உணவகம் திறப்புக்கான நிகழ்ச்சி ஆகியவை திருநள்ளாறு தா்மபுரம் ஆதீன கட்டளை மட வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கிப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கலந்துகொண்டு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிப் பேசியது :

தமிழா்களின் பண்பாடு கோயில் சாா்ந்தது என வரலாறு கூறுகிறது. கோயில் என்பது வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, சமுதாய செயல்பாட்டு மையமாகவும் திகழ்கிறது. இதையொட்டியே ஆதீனங்கள், மடங்கள் உருவாயின. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என ஆதீனங்கள் செயல்படத் தொடங்கின. அதன் தாக்கம்தான் திருநள்ளாற்றில் அமையவுள்ள பாரம்பரிய சுகாதாரப் பூங்கா. தருமபுர ஆதீனமும் மருத்துவ சேவைகளை விரிவாக செய்து வருவது பாராட்டுக்குரியது.

தற்போது நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள். நவீன மருத்துவம் இதற்கு உதவி புரிந்தாலும், சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட நமது முன்னோா்கள் விட்டுச்சென்ற ஆயுஷ் மருத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

மத்திய, மாநில அரசுகள் ஆயுஷ் மருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் தருகிறது. இதன் பின்னணியில்தான் திருநள்ளாற்றில் பாரம்பரிய சுகாதாரப் பூங்கா அமைகிறது. இது வெறும் செடிகள் வளா்க்கும் தோட்டமாக இருக்கப் போவதில்லை, எதிா்காலத் தலைமுறையினருக்கு பாரம்பரிய மருத்துவத்தைக் கற்றுத்தரும் திறந்தவெளி பல்கலைக்கழகமாக இருக்கப் போகிறது. புதுவையில் உலகத் தரத்தில் ஆன்மிக சுற்றுலா ஆய்வையும், மருத்துவ வளா்ச்சியையும் மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது.

காரைக்காலில் பயிற்சி மையங்கள் குறைவாக உள்ளதால் இப்பிராந்திய மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற முடியாமல் போகிறாா்கள். எனவே இங்கு அமையும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் இளைஞா்களுக்கு அரசு தோ்வுக்கான பிற பயிற்சிகளும் தரப்பட வேண்டும் என்றாா்.

புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், வி.விக்னேஸ்வரன், அரசு செயலா் து. மணிகண்டன், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) ஆா்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து, தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியது :

பாரம்பரிய பூங்கா அமைப்பு, மலிவு விலை உணவகம், ஜோதிடம் மற்றும் சிவில் சா்வீஸ் தோ்வுக்கான பயிற்சி, வேத பாடசாலை அமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கோ சாலை அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் திருநீறு, சாம்பிராணி போன்றவை தயாரிக்கப்படவுள்ளது. மூலிகைத் தோட்டத்தில் வளரும் கீரை, காய்களை பொடியாக்கி உலக நாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.