சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மாசி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உள்பட்ட திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மலை மீது தோணியப்பர், உமா மகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு நடைபெற்ற ஸ்தலம் ஆகும்.
இக்கோயிலில் மாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கோசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட பசு மாடு மற்றும் கன்றுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் பசுமாடு மற்றும் கன்றுக்கு வாழைப்பழம், அகத்திக் கீரை வழங்கி வலம்வந்து வழிபட்டனர். இதேபோல் மாசி மாத பிறப்பையொட்டி அஸ்திர தேவர் தீர்த்தவாரி நடந்தது. கோயிலிலுள்ள பிரம்மத் தீர்த்தத்தில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியப்பொடி, சந்தனம், பால், தயிர், முதலான பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.