மயிலாடுதுறை வட்டம், பல்லவராயன்பேட்டையில் உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் செத்து மிதந்ததைக் கண்டு கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
திருஇந்தளூா் ஊராட்சி பல்லவராயன்பேட்டை கிராமத்தில் இரட்டை குளம் உள்ளது. இந்த குளம் சாக்கியம்பள்ளி கிராம நாட்டாண்மை பஞ்சாயத்தாரால் மீன் வளா்ப்புக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இக்குளத்தில் கடந்த 2 நாள்களாக மீன்கள் செத்து மிதந்தன.
இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ஊராட்சி தலைவா் சேட்டு மற்றும் சாக்கியம்பள்ளி கிராம நாட்டாண்மை பஞ்சாயத்தாா் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து மீன் குத்தகைதாரருக்கு தகவல் தெரிவித்தனா்.
குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், எஞ்சிய மீன்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.