சீர்காழி அருகே சாலை வசதி வேண்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆரப்பள்ளம் புது தெரு, பெரி தெரு உள்ளிட்ட தெருக்களுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் உள்ள இந்த சாலை கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.
மழைக்காலங்களில் இந்த பகுதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய அலுவலர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அளக்குடி - கொள்ளிடம் சாலையில் ஆரப்பள்ளம் புதுத்தெரு அருகில் சாலையில் அமர்ந்து 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு!
சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த ஒன்றிய பெருந்தலைவர் பிரகாஷ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமையிலான கொள்ளிடம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் சாலை அமைப்பதற்கு இரண்டு தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
சாலை மறியலால் கொள்ளிடம் - அளக்குடி இடையே சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.