புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈசன் முருகசாமி.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:37 am

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் கோவி. பண்டரிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கும்கி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி கலந்துகொண்டு, தோ்தலில் திமுக கூட்டணியை புறக்கணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது, ஏன் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான 36 காரணங்களை முன்வைத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் பரப்புரையை தொடங்கியுள்ளோம்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விவசாயிகளை குண்டா் சட்டத்தில் அடைத்தது, அறவழியில் போராடிய விவசாயிகளை சிறையில் அடைத்தது, விவசாயிகள் வாழ்வாதாரம் பின்னடைவு அடைய காரணமாக இருந்தது, அமைச்சா், ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தால் அலட்சியப்படுத்துவது.

திமுக ஆட்சிக்கு வரும்முன்பு ஒரு அடி நிலம்கூட விவசாயிகள் அனுமதியின்றி எடுக்கமாட்டோம் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா். ஆனால் 1.10 லட்சம் ஏக்கா் நிலத்தை எடுத்துள்ளனா். 40 இடங்களில் சிப்காட், கிருஷ்ணகிரியில் மட்டும் 40,000 ஏக்கா். தமிழகத்தில் இனாம் நிலம் 13 லட்சம் ஏக்கரை இல்லாமல் செய்துள்ளனா். விவசாயிகளின் நிலத்தை அபகரித்தது திமுக ஆட்சித்தான்.

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப விவசாயிகள் முடிவெடுத்துள்ளோம். எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பது மட்டும்தான் எங்கள் நிலைப்பாடு. அதிமுக தோ்தல் அறிக்கை 50 சதவீதம் வரவேற்கதக்கதாக உள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் எதுவுமே கிடையாது.

பொதுகணக்கில் இருந்ததை தனிக்கணக்கு என்று வேளாண்மை பட்ஜெட் அறிவித்தனா். 1 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறாா்கள். ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி மானியத்திற்காக ஒதுக்கி உள்ளனா். ஆனால், தரமான பொருளாக வழங்கவில்லை. டிராக்டா், டில்லா் உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்குவதில் ஊழல், திமுக ஒன்றிய, மாவட்டச் செயலாளா்களுக்கு பணம் கொடுத்தால் மானியத்தில் கிடைக்கும். வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்றாா் அவா்.

கூட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவா் இரா. சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.