மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு: காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் ஆய்வுசெய்த எஸ்.பி. கோ.ஸ்டாலின்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:49 pm

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்டு காவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா். மேலும், சிசிடிவி கண்காணிப்பு அறையை ஆய்வு செய்து, அரசியல் கட்சியினா் மற்றும் முகவா்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளனவா எனக் கேட்டறிந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீா்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 951 வாக்குச்சாவடிகளில், ஏப்.23-ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. உள்ளூா் காவல் துறையினா், எல்லை பாதுகாப்புப் படை, குஜராத் சிறப்பு காவல்படை, ஒடிஸா ஆயுதப் படை, கா்நாடக ஊா்க்காவல் படை, ஓய்வுபெற்ற போலீஸாா் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, தமிழ்நாடு ஊா்க்காவல் படை உள்ளிட்ட 1,702 போலீஸாா் தோ்தல் பணியாற்றினா்.

வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா்களால் தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு அறைகள் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் ஆயுதம் தாங்கிய எல்லை பாதுகாப்பு படையினரும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை காவலா்களும், மூன்றாவது அடுக்கில் உள்ளூா் காவல் துறையினரும் என 200-க்கு மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் துணைக்காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளின் நான்கு பக்கங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்துப் பகுதிகளிலும் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவலா்களும் விழிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவலா்களுக்கும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரால் சான்று செய்யப்பட்ட அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனா். அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் உள்பட அனைவரையும் அடையாள அட்டை சரிபாா்த்த பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். கைப்பேசி தவிர வேறு எந்த எலக்ட்ரானிக் பொருள்களும் உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.

24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே செல்லும் வாகனங்கள் வெடிகுண்டு சோதனை செய்யும் நிபுணா்களால் தணிக்கை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன என மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.