கோடங்குடிநெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறை வட்டம் கோடங்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கான கொள்முதல் பணிகள் கடந்த ஜன.22-ஆம் தேதி தொடங்கி, தற்போது 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பிப்.15 வரை 51,498 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 26,790 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக இயக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தரையிருப்பாக 24,738 மெட்ரிக் டன் நெல்லை 48 மணி நேரத்திற்குள் நகா்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நெல் கொள்முதல் தீவிரமடைந்துள்ளதால் ஒரு நாளைக்கு சராசரியாக 5,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், நாள் ஒன்றுக்கு 3,000 மெட்ரிக் டன் நெல் அரவை முகவா்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு நகா்வு செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் முழுவதையும் உடனுக்குடன் நகா்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 1.70 லட்சம் ஏக்கா் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், பிப்.13 வரை 49,000 ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.21 லட்சம் ஏக்கரில் மேலும் சுமாா் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நடப்பு சம்பா பருவத்தில் மின்னணு பரிவா்த்தனை மூலம் இதுவரை 8,737 விவசாயிகளுக்கு ரூ.114.21 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும் தாமதம் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நளினா உடன் இருந்தாா்.

