நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத் துறையில் ஜவுளிக்கடை உள்ளிட்ட மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் புத்தாடைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் தோப்புத்துறை வடமழை ரஸ்தா பகுதியில் ஜவுளிக் கடை, டிராவல்ஸ் முகமை உள்ளிட்ட மூன்று கடைகள் அடுத்தடுத்துள்ளன.
இந்த கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது. கடைகளின் உரிமையாளர்கள் உள்ளே சென்றுபார்த்தபோது ரூ. 20 ஆயிரம் ரொக்கம், ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள ஜவுளிகள், மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்கள் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். நாகையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.