குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் தேர்ச்சி பெற்று தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் வருகின்ற நவம்பர் 12 முதல் 15-ஆம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கபடி போட்டியில் தமிழ்நாடு சார்பாக விளையாட நாகை மாவட்டம், குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிவதருண், அஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தமிழ்நாடு சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு தஞ்சை மாவட்டம் வடுவூரில் வருகின்ற நவம்பர் 1 முதல் 9-ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுபோல் இந்திய அமெச்சூர் கபடி கழகம் சார்பில் வருகின்ற நவம்பர் 4 முதல் 7-ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கபடி போட்டியில் தமிழ்நாடு சார்பாக விளையாட நாகை மாவட்டம், குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அபிமன்யூ விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அமெச்சூர் கபடி கழகம் சார்பில் தமிழ்நாடு சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் வருகின்ற அக்டோபர் 22 முதல் 31-ஆம் தேதி வரை பயிற்சிமுகாம் நடைபெறுகிறது.
விளையாட தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.பரமசிவம், உதவி தலைமை ஆசிரியர்கள் சிவகுமார், பாலசுப்பிரமணியன், பாமா, உடற் கல்வி இயக்குநர் பா.காந்திமதி, உடற்கல்வி ஆசிரியர்கள் கே.சுவாமிநாதன், டி. பிரபு டேவிட் சாமுவேல், சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.